சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்

ஆட்சேபகரமான தகவல்கள் பரப்புவதை தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2018-12-24 16:03 GMT

புதுடெல்லி, 


பசு கடத்தல், குழந்தை கடத்தல் தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்களும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கையை மேற்கொண்டது. 

இந்நிலையில்  சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த வரைவு திருத்தங்களை இணையதளத்தில் வெளியிட்டு, ஜனவரி 15–ந்தேதிக்குள் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்க உள்ளது.

வரைவு திருத்தங்களின்படி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான, சட்டவிரோத, பொய்யான தகவல்களை அடையாளம் கண்டறிந்து செயலிழக்க செய்ய தொழில்நுட்ப ‘டூல்’களை பயன்படுத்த வேண்டும். ஆட்சேபகரமான தகவல்களை பகிர வேண்டாம் என்று பயனாளர்களிடம் சமூக வலைத்தளங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். 50 லட்சத்துக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்கள், இந்தியாவில் நிரந்தர அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்