ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் - ஸ்மிரிதி இரானி வலியுறுத்தல்

ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என ஸ்மிரிதி இரானி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-01-06 22:00 GMT
புதுடெல்லி,

பணமோசடி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் உதவியாளரை ஜாமீனில் வெளி வரமுடியாத விதத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது.

இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறும்போது, “ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோராவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. எனவே நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேரா தனது உதவியாளர் மனோஜ் அரோராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதை உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விவாதத்தின்போது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது ராகுல்காந்தி கண் சிமிட்டியது ஒரு பெண் மந்திரியின் உணர்வுகளை காயப்படுத்துவது ஆகும். மேலும் இது சபையின் கண்ணியத்தை அவமதிப்பது போலவும் உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்