கவனத்தை திசை திருப்பவே 10 சதவீத இட ஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு விமர்சனம்

ரபேல் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-09 02:07 GMT
அமராவதி,

பொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  

இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். 
4 மணி நேர விவாதத்துக்கு பிறகு, இரவு 10 மணியளவில், இடஒதுக்கீட்டு மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். யாரும் ஓட்டெடுப்பை புறக்கணிக்கவில்லை.

எனவே, மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதா நிறைவேறியதாக அறிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத ஆதரவுடன் மசோதா நிறைவேறி இருப்பதாக கூறினார். மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சந்திரபாபு நாயுடு விமர்சனம்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருப்போருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்திருப்பதாக ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்துள்ளார். 

கர்னூல் மாவட்டம், கோசிகிராமத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-  “ரபேல் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளது. இருப்பினும், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்போருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை தெலுங்கு தேசம் கட்சி ஆதரிக்கிறது” என்றார். 

மேலும் செய்திகள்