மேற்கு வங்காளம்: ரூ.3.77 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

மேற்கு வங்காளத்தில், ரூ.3.77 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-09 17:45 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் வங்காளதேச எல்லை பகுதியான நதியா மாவட்டத்தில் உள்ள மஜிதிதா ரெயில் நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கெடே–ரனாகட் மின்சார ரெயிலில் வந்திறங்கிய 2 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து சோதனை நடத்தியபோது, அவர்கள் வைத்திருந்த பையில் 11.66 கிலோ எடையுள்ள 100 தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3.77 கோடி.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்