சபரிமலை செல்ல முயன்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை அய்யப்பன் கோயில் செல்ல முயன்ற இரண்டு பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தினர்.

Update: 2019-01-16 03:12 GMT
நிலக்கல்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.  

இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், பலத்த போராட்டங்களையும் மீறி அண்மையில், கேரளாவைச்சேர்ந்த பெண்கள் உட்பட சிலர் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். 

இவ்வாறாக, சபரிமலை கோயில் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவிவருகிறது. இதனால், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலையில், இரண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். 

ஆனால், பேஸ்கேம்ப் பகுதியை தாண்டியதும், பெண்களை முற்றுகையிட்ட அய்யப்ப பக்தர்கள்  அவர்களை  மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டதையடுத்து, போலீசார், பெண்களை பம்பைக்கு திருப்பி அனுப்பினர். முன்னதாக, போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்த பெண்கள், 41 நாட்கள் விரதம் இருந்ததாகவும், வழிபடாமல் திரும்பிச்செல்ல மாட்டோம் எனவும் கூறினர். 

மேலும் செய்திகள்