வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி
தேயிலை தோட்டத்தில் அமைந்த வீட்டில் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று சிறுத்தை புலி கடித்து கொன்றது.
அலிப்பூர்துவார்,
மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தில் மதரிஹேட் பகுதியில் கர்காண்டா என்ற தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு உள்ள தொழிலாளர்களுக்கான வீடு ஒன்றில் பூஜா ஓராவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பிரணீதா (வயது 3). நேற்றிரவு தனது மகள் பிரணீதாவை மடியில் வைத்து கொண்டு பூஜா ஓராவன் அமர்ந்து இருந்துள்ளார்.
இந்த நிலையில், அங்கு வந்த சிறுத்தை புலி ஒன்று வீட்டிற்குள் புகுந்து பிரணீதாவை தூக்கி கொண்டு ஓடியது. அதனை தடுக்க அவளது தாய் முயன்றுள்ளார். ஆனால் அவரால் மகளை காப்பாற்ற முடியவில்லை. மிக பெரிய சிறுத்தை புலியாக இருந்தது. அதனால் அதனுடன் போராட முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கிருந்தவர்கள் இரவு முழுவதும் பிரணீதாவை தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை தேயிலை தோட்டத்தில் பிரணீதாவின் உடற்பகுதிகள் கிடந்துள்ளன.