சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு

சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2019-01-17 08:12 GMT
புதுடெல்லி,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்