இன்று காலை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற 2 பெண்கள் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2019-01-19 06:23 GMT
திருவனந்தபுரம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசும் முழு அளவில் உத்தரவிற்கு இணங்கியது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு செல்லும் இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.

சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், இன்று காலை மேலும் இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாமை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தினர். பம்பையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளதால் திரும்பி  செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்