எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு
எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோக்பனி-ஆனந்த் விகார் செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் ரெயில் இன்று அதிகாலை 3.58 மணியளவில் சஹடாய் பஜர்க் பகுதியருகே விபத்தில் சிக்கி தடம் புரண்டது.
இந்த விபத்தில் 11 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன. இவற்றில் 3 பெட்டிகள் கவிழ்ந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
தடம் புரண்ட ரெயில் பெட்டிகளில் 3 படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் (எஸ் 8, எஸ் 9, எஸ் 10), ஒரு பொது பெட்டி மற்றும் ஒரு ஏ.சி. (பி 3) பெட்டி ஆகியவையும் அடங்கும். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள், பலியானோர் ஆகியோரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.
ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். அனைத்து வித உதவிகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டும் உள்ளார்.
இந்த நிலையில், எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதேபோன்று படுகாயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமும், சிறிய அளவிலான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மருத்துவ செலவு தொகையையும் ரெயில்வே நிர்வாகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.