டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
புதுடெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது. தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கோவையை சேர்ந்து அரவிந்த சிவகுமாரன் மற்றும் நந்தகுமார் உடல்கருகி உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.