சட்டமன்ற தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா? ஜம்மு காஷ்மீரில் தேர்தல் கமிஷன் ஆய்வு
சட்டமன்ற தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா? என்பது குறித்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் கமிஷன் ஆய்வு நடத்துகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.
மாவட்ட காவல்துறை அதிகாரிகள், துணை ஆணையர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தும் இந்த குழுவினர், பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டு தெரிந்து கொள்கின்றனர். ஜம்முவுக்கு இன்று இரவு புறப்படும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நாளை அங்குள்ள அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக ஆறு மாதங்கள் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. பிடிபி - பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியதையடுத்து கடந்த 2018- ஜூன் மாதத்தில் ஆட்சி கலைந்தது நினைவிருக்கலாம்.