இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரசுக்கு பிரதமர் மோடி பதிலடி

பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2019-03-22 07:50 GMT
புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து 
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா, கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் தலைவரின் ஆலோசகர் பாகிஸ்தான் தேசிய நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்திய ராணுவப் படைகளை அவமானப்படுத்தி அவர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.

எதிர்கட்சிகள் நமது ராணுவப் படையை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தி வருகின்றன. நான் என் சக இந்திய குடிமக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், எதிர்கட்சித் தலைவர்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். 130 கோடி இந்தியர்கள், எதிர்கட்சிகளின் இந்த தரம் தாழ்ந்த கருத்துகளை  மன்னிக்க மாட்டார்கள்' என்று டுவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பிட்ரோடா, ‘பாலகோட் தாக்குதல் குறித்து நான் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் எதன் மீது தாக்குதல் நடத்தினோம். நாம் உண்மையிலேயே 300 தீவிரவாதிகளைக் கொன்றோமா? அந்த சம்பவம் குறித்து இன்னும் நிறைய தரவுகளும் தகவல்களும் அளிக்கப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்