பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து 22 செ.மீ. நீள கல் நீக்கம்
உத்தர பிரதேச பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து 22 செ.மீ. நீளமுள்ள கல் ஒன்று நீக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியை சேர்ந்த பெண் நடாஷா. இவரது சிறுநீரக பாதையில் கல் ஒன்று இருந்துள்ளது. அது 22 செ.மீ. நீளமும், 60 கிராம் எடையும் கொண்டது.
அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இவ்வளவு பெரிய அளவிலான கல் இருந்தது பற்றிய வலியும் இல்லை. அதனை பற்றி அறிந்திருக்கவும் இல்லை. இதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
இதுபற்றி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இதுபோன்ற மிக பெரிய கற்கள் திறந்த வழியிலான நடைமுறைகளின் வழியே நீக்கப்படும். ஆனால், இவருக்கு 4 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையில் டா வின்சி எனப்படும் ரோபோ பயன்படுத்தி ஒரே கட்டத்தில் கல் நீக்கப்பட்டு உள்ளது.
இது உலக அளவில் மிக பெரிய கல் ஆகும். இதற்கு முன் 21.5 செ.மீ. அளவிலான கல் நீக்கப்பட்டு உள்ளது. ரோபோ பயன்படுத்துவது ஒரு சில மருத்துவமனைகளிலேயே உள்ளது. இதனால் தழும்பு இல்லாமல் அதிவிரைவில் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என தெரிவித்து உள்ளது.