மம்தா உறவுப்பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன் ஒருவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார்.
புதுடெல்லி,
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி, கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரது உடைமைகளை அங்கிருந்த சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். இதற்காக அந்த அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீசார் மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் 29–ந் தேதி, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. மேற்கு வங்காளத்தில் சட்டம் சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டியது.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்தை யாரோ சிலர் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இது, மிக மிக சீரியசான விஷயம். யார் சொல்வது நம்பகமானது என்று தெரியவில்லை’’ என்றனர்.
மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.