வேறொரு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை

மத்திய பிரதேசத்தில் வேறொரு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் புரிந்ததற்காக இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-04-14 03:11 GMT
ஜபுவா,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஜபுவா மாவட்டத்தில் தேவிகார் பகுதியில் 20 வயது கொண்ட இளம்பெண் ஒருவர் வேறொரு சாதியை சேர்ந்த நபரை காதலித்துள்ளார்.  அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

இந்த விவரம் தெரிய வந்ததும் பெண்ணின் சமூகத்தினர் வினோத தண்டனையை வழங்கி உள்ளனர்.  தனது கணவரை தோளில் சுமந்தபடி தூக்கி கொண்டு நீண்ட தொலைவுக்கு அந்த பெண்ணை நடந்து செல்லும்படி அவரது சமூகத்தினர் வற்புறுத்தி உள்ளனர்.

அந்த பெண்ணை ஆண்கள் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து நடப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றனர்.  ஓய்வுக்காக அவர் நிற்கும்பொழுது சுற்றி இருப்பவர்கள் கேலி செய்ததுடன், பெண்ணை நடக்கும்படி கூறி கூச்சலிட்டு உள்ளனர்.  இதனால் உதவியற்ற நிலையில் அந்த பெண் தொடர்ந்து நடந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளது.  இதனை அடுத்து போலீசார் ஐ.பி.சி.யின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கொன்றை பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்