ஒடிசாவில் மர்ம நபர்களால் பா.ஜனதா தலைவர் சுட்டுக் கொலை

ஒடிசாவில் மர்ம நபர்களால் பா.ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Update: 2019-04-15 08:47 GMT
கோர்தா நகரில் பா.ஜனதா வேட்பாளர் வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பா.ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் மங்குலி ஜனாவை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் வரும்வழியிலே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. 

பா.ஜனதா கட்சி இன்று 6 மணி நேர பந்திற்கு அழைப்பு விடுத்தது.  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், “எங்களுடைய கட்சி தலைவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதாவினர் கொலைக்கு ஆளும் பிஜு ஜனதா தளம்தான் காரணம். மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்,” எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்