ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம்: பிரதமர் மோடி மீது டெல்லி போலீசில் புகார்

ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம் செய்த, பிரதமர் மோடியின் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-13 21:45 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடுமையாக விமர்சித்தார். அதாவது, ‘ஊழல் நம்பர் ஒன்று’ என்ற நிலையில்தான் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை முடிந்தது என கூறினார். போபர்ஸ் ஊழல் வழக்கை முன்வைத்து பேசிய அவரது இந்த கருத்து காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தற்போது பிரதமர் மோடி மீது அஜய் அகர்வால் என்ற வக்கீல் டெல்லி சாணக்கியபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக மோடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தனது புகார் மனுவில் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும் போபர்ஸ் ஊழலில் வழக்கு தொடர்ந்ததே நான்தான் எனவும் அந்த புகார் மனுவில் அஜய் அகர்வால் கூறியுள்ளார்.

முன்னதாக, ‘இறந்து போன ஒருவரைப்பற்றி இவ்வாறு பேச வேண்டாம்’ என அவர் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்