ஜம்மு காஷ்மீர்: தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Update: 2019-05-24 07:29 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஜாகீர் மூசா  பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் தத்சரா கிராமத்தில் உள்ள திரால் பகுதியில் அன்சர் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் மூசா உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல்  வேட்டையில் இறங்கினர். 

அப்போது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்த பாதுகாப்புப்  படையினர் அவர்களை சரண் அடைந்து விடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் அதற்கு மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த  மோதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனின் உடலை அடையாளம் கண்டதில் ஜம்மு காஷ்மீரில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா என்பது தெரியவந்தது.

அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் ஆதரவில் இயங்கி வந்த அமைப்பான அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பின்  தலைவராக ஜாகீர் மூசா செயல்பட்டு வந்தான். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அவந்திபோரா, புல்வாமாவில் பாதுகாப்பு படையினர்  இணையதள இணைப்பை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்