ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சுட்டு கொலை
ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அமேதி,
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பா.ஜ.க.வின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய மந்திரியான இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.
தேர்தல் பிரசாரத்தில் இங்குள்ள பரவுலியா கிராமம் பிரபலமடைந்தது. இங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார்.
இந்த காலணிகளை வழங்கிய பணியில் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் (வயது 50) என்பவர் ஈடுபட்டார். இவர் இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் மரணம் அடைந்து விட்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.