வெற்றி பெற்றுள்ள தொகுதியில் கவனம் செலுத்துங்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வைப்புத்தொகையாக செலுத்திய ரூ.10 கோடியை திரும்ப கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ரூ.10 கோடியை வைப்புத்தொகையாக செலுத்தினார்.
இந்த நிலையில், வைப்புத்தொகையாக செலுத்தப்பட்ட ரூ.10 கோடி, தான் வங்கியில் கடனாக பெற்றதாகவும் இதற்காக வட்டியை செலுத்தி வருவதால், இந்த பணத்தை திரும்ப வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ”உங்களை தேர்வு செய்த தொகுதியில் கவனம் செலுத்துங்கள்” என்றது.