காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் உள்பட 3 பேர் பலி

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உள்பட 3 பேர் இறந்தனர்.

Update: 2019-05-31 21:35 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் உள்ள சுகன் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூட்டு பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தை நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர். மேலும் இதுபற்றிய தகவல் வெளியே பரவக்கூடாது என்பதற்காக இணையதள வசதியை முடக்கினர்.

பழத்தோட்டத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் தங்களை சுற்றி வளைத்ததை அறிந்தவுடன் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.

இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறே பாதுகாப்பு படையினர் முன்னேறினர். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்களுக்கு உதவிய ஒருவரும் கொல்லப்பட்டார். இறந்தவர்களில் ஒருவர் சாஜூ மக்ரே என்பதும், அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மற்ற இருவரையும் அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில இளைஞர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.

மேலும் செய்திகள்