கேரளாவில் தொடர் மழை; மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்சாரம் தாக்கிய விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-06-10 19:28 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தின் பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மின்கம்பம் ஒன்று சாய்ந்திருந்தது. இதை தொட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வலியதுறை, சங்குமுகம், பூந்துறை போன்ற கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் கரையை தாக்கி வருவதால் வலியதுறை பகுதியில் சில வீடுகள் இடிந்துள்ளன. இதனால் கரையோர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்