லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயார்

லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு, மும்பை சிறையில் அறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-11 22:15 GMT
மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு சென்ற இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார், அங்குள்ள வசதிகள் என்ன என்று லண்டன் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இதுதொடர்பாக மும்பை சிறை நிர்வாகம் மாநில உள்துறைக்கு ஒரு பதில் அனுப்பியுள்ளது. அதில், ஆர்தர் ரோடு சிறையில் 12-ம் எண் செல்லில் 2 அறைகள் உள்ளன. இதில் ஒன்று நிரவ் மோடிக்கு தயாராக உள்ளது. நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரையும் கூட அந்த ஒரே அறையில் அடைக்கலாம். 20 அடிக்கு 15 அடி கொண்ட அந்த அறையில் 3 மின்விசிறிகள், 6 டியூப் லைட்டுகள், 2 ஜன்னல்கள் உள்ளன. நிரவ் மோடிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 3 சதுர மீட்டர் இடம் கிடைக்கும். ஐரோப்பிய விதிகளின்படி அவருக்கு பருத்தி மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவை வழங்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்ச்சிக்காக அறைக்கு வெளியே அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிரவ் மோடிக்கு 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்டதால், லண்டன் ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

மேலும் செய்திகள்