ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது

நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.

Update: 2019-07-10 13:23 GMT
நாட்டின் பிரதமராக மோடி கடந்த 2014-ல் பதவியேற்ற பின்னர் அதே ஆண்டின் ஆகஸ்டு 15–ம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றியபோது, நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த வங்கி கணக்கு விபத்து காப்பீடு வசதி கொண்டது. ரூபே டெபிட் கார்டு வசதியும் உண்டு. வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக ரொக்கமாக (ஓவர் டிராப்ட்) எடுக்க முடியும். 

மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை இந்த வங்கி கணக்கு வழியாக பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் குறைந்தபட்ச இருப்புத்தொகை, வங்கி கணக்கில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, கடந்த 3–ந் தேதி நிலவரப்படி ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 லட்சத்து 495 கோடியே 94 லட்சம் ஆகும். இந்த வங்கி கணக்குகளை தொடங்கியவர்களில் 28 கோடியே 44 லட்சம் பேர் ரூபே டெபிட் கார்டு வசதியை பெற்றுள்ளனர். ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்