காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள்; கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சுக்கு எதிர்ப்பு

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்து விட்டு காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள் என்று காஷ்மீர் கவர்னர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

Update: 2019-07-22 05:26 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், “லஞ்சம் தான் நாட்டின் பெரும் நோயாக உள்ளது. இந்த நாட்டில் அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களையும் ஏன் துப்பாக்கி ஏந்தி பயங்கரவாதிகள் கொல்ல வேண்டும்? இதற்கு பதில் இந்த காஷ்மீர் வளங்களை கொள்ளை அடித்தவர்களை தாக்க வேண்டியதுதானே?

துப்பாக்கியால் இந்த அரசை பணிய வைக்க வேண்டும் என பயங்கரவாதிகள் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள். துப்பாக்கியால் இளைஞர்கள் தங்களின் வாழ்வை இழக்க வேண்டாம்” என்றார்.

கவர்னர் சத்யபால் மாலிக்கின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள கவர்னர் சத்யபால் மாலிக், “எனது கருத்து கோபம் மற்றும் விரக்தியில் வெளிவந்தவை. ஒரு கவர்னராக நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது. நான் கவர்னராக இல்லாவிட்டால் இந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தி கூறுவேன். இங்குள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளனர். கவர்னராக இல்லாமல் தனிமனிதராக நான் இவ்வாறாகவே கருதுகிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்