ராஜினாமா கடிதம்? மிகவும் மலிவான விளம்பரம் - குமாரசாமி
ராஜினாமா கடிதம் விவகாரத்தில் மிகவும் மலிவான விளம்பரம் என குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த 18-ம் தேதி முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று கூடியது. விவாதமும், விமர்சனமும்தான் தொடர்கிறது.
இதற்கிடையே குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் எனவும் தகவல்கள் கிளம்பியது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக குமாரசாமி சட்டசபையில் கடிதமொன்றை வைத்து பேசினார். அவரது கையெழுத்திட்ட ராஜினாமா கடிதம் என சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். ”நான் என்னுடைய ராஜினாமாவை கவர்னரிடம் கொடுத்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. யார் முதல்வர் ஆக வேண்டும் என காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய போலியான கையெழுத்துடன் ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுபோன்ற மிகவும் மலிவான விளம்பரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.