மும்பையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதல்; 8 பேர் காயம்
மும்பையில் கனமழை பொழிந்து ஏற்பட்ட தெளிவற்ற வானிலையால் இன்று காலை அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.
மும்பை,
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதில் சியான் ரெயில்வே நிலையத்தின் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து இதனால் பாதிப்படைந்து உள்ளது. நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோன்று சாலையில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்ட தெளிவற்ற வானிலையால் மும்பை அந்தேரி பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து 3 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு விபத்திற்குள்ளாகின. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.