சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்

சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம் வெளியானது சர்ச்சையாகியுள்ளது.

Update: 2019-08-16 12:12 GMT
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளார். அவரை பா.ஜனதா கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் இருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகையில் நேற்று சுதந்திர தினத்தன்று வெளியான விளம்பரத்தில் குல்தீப் சிங் செங்கார் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.  

விளம்பரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரின் புகைப்படமும் இடம் பெற்று உள்ளது. விளம்பரத்தை உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் அனுஜ் குமார் திக்‌ஷித் கொடுத்துள்ளார்.  குல்தீப் சிங் செங்கார் எங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ. அதனால் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளார் எனக் கூறியுள்ளார். 

குல்தீப் சிங் செங்கார் விவகாரத்தில் கட்சி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்து விட்டது. குல்தீப் சிங் செங்காரிடம் எங்களுக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது.

மேலும் செய்திகள்