கேரள வெள்ளம்; பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு

கேரள வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2019-08-19 07:33 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவமழை கடந்த ஜூனில் தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது.  இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது.  சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

கேரளாவில் கடந்த 8ந்தேதியில் இருந்து கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு இதுவரை 121 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் 58 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.  அங்கு 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

கேரள மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 8ந்தேதி முதல் இன்று வரை கேரள வெள்ள பாதிப்பு சம்பவத்திற்கு 40 பேர் காயமடைந்து உள்ளனர்.  21 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கேரளாவில் 185 முகாம்கள் அமைக்கப்பட்டு 8 ஆயிரத்து 247 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளன.  1,789 வீடுகள் முழுவதும் மற்றும் 14 ஆயிரத்து 542 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்