கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்!
உத்தரபிரதேச மாநிலத்தில் கணவருக்கு மனைவி தினமும் உணவாக லட்டு மட்டுமே வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த தம்பதி திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது கணவர் சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜோசியத்தில் நம்பிக்கை வைத்துள்ள மனைவி ஒரு ஜோசியரிடம் அணுகி கணவர் நலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஜோசியர் தினமும் 2 வேளைக்கு 8 லட்டுகள் மட்டுமே சாப்பிட்டு வந்தால் கணவர் நலமாக இருப்பார் என கூறியுள்ளார். ஜோசியர் கூறியதையடுத்து தம்முடைய கணவர் நலமாக இருக்கவேண்டும் என்று தினமும் லட்டுகளை மட்டுமே உணவாக கொடுத்துள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவர், தனக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்ட்டினை அணுகியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து கவுன்சிலிங் கொடுத்த அதிகாரி, 'கணவன், மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அந்த பெண் லட்டு சாப்பிட்டால் மட்டும் தான் தன்னுடைய கணவருக்கு நல்லது என உறுதியாக கூறுகிறார் என்றார்.
இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது.