காஷ்மீரில் போஸ்டர்களால் மக்களை அச்சுறுத்திய 8 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் போஸ்டர்களால் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்திய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-09-10 09:21 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் நகரில் பிரபல பழ வியாபாரியாக இருந்து வருபவர் ஹமீதுல்லா ராவுத்தர்.  கடந்த வாரம் இரண்டு பயங்கரவாதிகள் இவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு அவர் இல்லை.

இதனால் அவர்கள், அவரது குடும்பத்தினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.  இதில் அவரது பேத்தியான அஸ்மா ஜான் என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.  படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்பின்பு காஷ்மீரின் சில பகுதிகளில் பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வகையில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.  பொதுமக்களை சட்டத்திற்கு கீழ்படியாமல், வன்முறையில் ஈடுபட தூண்டும் வகையிலும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர்களால் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்திய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதிகள் 8 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்