போக்குவரத்து விதிமீறல் : மாநில அரசுகள் விரும்பினால் அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் -நிதின் கட்கரி

மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-11 09:34 GMT
புதுடெல்லி,

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.  சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர்.  அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து மேற்கு  வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 6 மாநிலங்கள் மத்திய அரசின்  இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. குஜராத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பது அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து  குஜராத்  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைத்து குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகையை குறைத்து கொள்ளலாம் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர் சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை, விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது. அரசின் வருவாயை பெருக்குவதற்காக உயர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்