புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2019-09-12 06:27 GMT
டேராடூன்,

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு, புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை சற்று தளர்த்தியுள்ளது. 

அதன்படி ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகை ரூ.5000-ல் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம் பெற தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் வாகனம் ஓட்டி வந்தால், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.5000 ஆக குறைத்துள்ளது.

அதிக வேகத்தில் செல்வோருக்கு ரூ.2000 அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உட்பட வேறு எந்த அபராத தொகையிலும் மாற்றம் செய்யவில்லை என உத்தரகாண்ட் அரசாங்கம் தெரிவித்துள்ளது. குஜராத் அரசாங்கம் நேற்று அபராதத்தை குறைத்த நிலையில் இன்று உத்தரகாண்ட் அரசு அபராத தொகையை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்