சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி தனது நேரத்தை சொந்த மாநிலமான குஜராத்தில் செலவிடுகிறார்.
நர்மதா மாவட்டம் கிவடியா பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார். மோடியை, கவர்னர், முதல்-மந்திரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருந்து, கல்வானி சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டார். அங்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களையும் மோடி பார்வையிட்டார்.
பின்னர், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்ற மோடி, சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் தயாரிக்கும் பணியையும் பார்வையிட்டார். பொருட்கள் செயல்முறை குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் சர்தார் சரோவர் அணையை பார்வையிட்ட மோடி, அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து பூஜையும் செய்தார். தொடர்ந்து, குருதேஸ்வர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
குஜராத் மாநிலம் கெவாதியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி ,
குஜராத்தில், கிராமங்களும், நகரங்களும் நீர் வழிப்பாதையில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது. தாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக பங்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். நர்மதா அணை திட்டத்தின் மூலம் குஜராத் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் பலனடைந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, நீரை சேமிக்கும் பிரசாரம் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டார். குஜராத்தில் மைக்ரோ பாசனம் மூலம் உரம் உள்ளிட்ட செலவுகள் பலமடங்கு குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.