வங்கிகள் வழியாக தேர்தல் கமிஷன் கண்காணிக்கும் - 2 மாநில சட்டசபை தேர்தலில் அதிரடி

2 மாநில சட்டசபை தேர்தலில் பண பலத்தை பயன்படுத்துவதை தடுக்க வங்கிகள் வழியாக தேர்தல் கமிஷன் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-21 22:30 GMT
புதுடெல்லி,

மராட்டியம், அரியானா ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்கள் பண பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கிறது.

டெல்லியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று நிருபர்களிடம் பேசுகையில் இதுபற்றி குறிப்பிட்டார். அப்போது அவர், “மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலில் பண பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க வங்கிகள் வழியாக கண்காணிக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் இதில் அடங்கும்” என குறிப்பிட்டார்.

இந்தப் பணியில் வருமான வரித்துறையின் நிதி புலனாய்வு பிரிவு ஈடுபடுத்தப்படுகிறது. வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்கு பணம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த பெருமளவிலான நிதி பரிமாற்றங்கள் சரிபார்க்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேர்தலுக்காக வேட்பாளர்கள் தனி வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும்; அந்த கணக்கில் இருந்துதான் பணம் எடுத்து செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்