பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்குகளில் தேடப்பட்ட 3 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-09-23 10:14 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதனால் 4 பயங்கரவாத செயல்கள் தொடர்புடைய வழக்குகளில் தீர்வு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி ஜம்மு மண்டல ஐ.ஜி. முகேஷ் சிங் கூறும்பொழுது, கடந்த வருடம் நவம்பரில் இருந்து இந்த வருடம் செப்டம்பர் வரை 4 பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நிசார் அகமது ஷேக், நிஷாத் அகமது மற்றும் ஆசாத் உசைன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் உள்ள இவர்கள் அனைவரும் கிஸ்த்வார் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர் என கூறினார்.

இவர்களில் நிசார் அகமது ஷேக் என்பவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சேர்ந்த சந்திரகாந்த் சர்மா மற்றும் அவரது தனி பாதுகாப்பு அதிகாரி கொலையில் தொடர்புடையவர்.  இதேபோன்று பா.ஜ.க.வை சேர்ந்த மாநில செயலாளர் அனில் பாரிஹார் என்பவர் கொலை செய்யப்பட்டபொழுது சம்பவ இடத்தில் இருந்ததுடன், அதற்கான சதியிலும் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் அகமது ஷேக்.  அனில் மற்றும் அவரது சகோதரர் அஜீத் ஆகியோர் கடையில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தபொழுது மர்ம நபர்கள் அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றனர்.

காஷ்மீரின் ஜீனப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதத்தினை வளர செய்வதற்காக கடந்த 2017-18ம் ஆண்டில் சதி திட்டத்தில் ஈடுபட்ட மற்ற தீவிரவாதிகளை கைது செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது என சிங் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்