விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்கிறது உ.பி. அரசு; பிரியங்கா குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்ந்திடும் அரசு நடந்து வருகிறது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் மகோபா மற்றும் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் கடன் விவகாரங்களில் சிக்கி தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானது.
இதனை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் அரசை சாடும் வகையில், விவசாயிகளை துன்புறுத்துவதற்காக புதிய வழிகளை அரசு கண்டறிந்து உள்ளது. கடன் தள்ளுபடி என்ற பெயரில் மோசடி செய்து வருகிறது. மின் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகளை சிறையில் தள்ளி வருகிறது என தெரிவித்து உள்ளார்.
வெள்ளம் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் திட்டங்கள், விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவு கூர்கிறது என்று விவசாயிகளை அரசு நடத்தி வரும் விதம் பற்றி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.