திப்பு சுல்தானின் வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும்-கர்நாடக முதல்வர் எடியூரப்பா
திப்பு சுல்தானின் வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.
பெங்களூரு
18 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் வரலாறு பள்ளி பாடத் திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா இன்று தெளிவுபடுத்தி உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது திப்பு ஜெயந்தி ஆண்டு தோறும் நவம்பர் 10 ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனை பாரதீய ஜனதாவும் (பாஜக) மற்றும் சங்பரிவாரும் எதிர்த்தன.
முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு கடந்த 5 ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்படும் மாநிலத்தில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்திருந்தது.
இன்று பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா திப்பு சுல்தானின் வரலாறு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் . அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பதால் இதுபோன்ற தலைப்புகள் புத்தகங்களில் சேர்க்கப்படக்கூடாது என கூறினார்.
சமீபத்தில் மடிகேரியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன் முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் அதில் திப்பு சுல்தான் குறித்த அனைத்து குறிப்புகளையும் வரலாற்று புத்தகங்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரஞ்சன் தனது கடிதத்தில், திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படுகிறார். பாடப்புத்தகங்களில் உள்ள வரலாறு பொய்யானது. திப்பு பல இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் மக்களை படுகொலை செய்ததாக அவர் கூறினார். அவரது ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட மொழி பாரசீக மொழியாக இருந்ததால் திப்பு கன்னடத்திற்கு எதிரானவர்.
நம் வருங்கால சந்ததியினரிடம் உண்மையை சொல்ல வேண்டும். எனவே, தற்போதைய பாடத்திட்டங்கள் மற்றும் நூல்கள் குறித்து கல்வி நிபுணர்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் தேசபக்தி மற்றும் நாடு மீதான அன்பு போன்ற கருத்துக்களைக் கொண்டு வாருங்கள் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.