"மதுரை அழகர் மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது தான்" -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மதுரை அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது தான் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2019-11-06 12:04 GMT
புதுடெல்லி,

மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அழகர் கோயில். மிகவும் பிரசித்திபெற்ற வைணவத் தலமான இக்கோயில் வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இப்பகுதி அழகர் மலை என அறியப்படுகிறது.  இந்தநிலையில், மதுரை அழகர் மலை, கோவிலுக்கு சொந்தம் என கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை பல ஆண்டுகளாக விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அழகர் மலையை கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமென அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அழகர் மலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக  அறிவிக்கப்பட்டு உள்ளதால், மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட எந்த விதமான சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட கூடாது. அதேவேளையில், ஏற்கெனவே அரசு மற்றும் கோவில் நிர்வாகத்துக்கு இடையே பேசி ஒப்புக்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கத்திற்கான 25 அடி அகல நிலம் என்ற வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளலாம் எனவும் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்