அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் - முகலாய இளவரசர்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என்று முகலாய இளவரசர் யாகூப் ஹபிபு தின் டுக்கி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. நேற்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் முகலாய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபு தின் டுக்கி கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும். இதன் மூலம் சகோதரத்துவத்துக்கு உதாரணமாக திகழ வேண்டும். அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு தங்கத்தால் ஆன ஒரு செங்கலை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகலாய அரச வம்சத்தில் கடைசியாக வந்த பகதூர்ஷா ஷாபரின் வாரிசு என இவர் தன்னை அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.