காஷ்மீரில் ரயில் சேவை இன்று மீண்டும் தொடக்கம்

காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்று முதல் ரயில்சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

Update: 2019-11-12 03:57 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அங்கு போராட்டங்கள், வதந்திகள் பரவி வன்முறை ஏற்படலாம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது, அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: - காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 3 மாதங்களாக ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காஷ்மீரில் இரு தடங்களில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து,  ஸ்ரீநகர் - பாரமுல்லா இடையேயான வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை ரயில் சேவை  தொடங்க உள்ளது. ஸ்ரீநகர் - பனிகால் வழித்தடத்தில் சில நாள்களில் ரயில் சேவை தொடங்கும்” என்றனர்.

மேலும் செய்திகள்