காஷ்மீர் மலைப்பாதையில் விபத்து; 16 பேர் பலி

காஷ்மீரில் பயணிகள் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-11-12 14:34 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கிலானி என்ற இடத்தில் பயணிகள் வாகனம் ஒன்று சென்றது. அங்குள்ள மலைப்பாதையின் வளைவில் வாகனத்தை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையில் இருந்து விலகி 700 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து, கீழ்ப்புற சாலையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியானவர்களில் 3 குழந்தைகளும், 5 பெண்களும் அடங்குவர்.

வாகனம் கீழே உள்ள சாலையில் விழுந்தபோது, அந்த பகுதியில் வாகனம் எதுவும் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு மேலும் உயிரிழப்பு அதிகரித்து இருக்கக்கூடும்.

மேலும் செய்திகள்