நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓய்வெடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார்.

Update: 2024-04-27 23:02 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, வாக்குப்பதிவு முடிந்ததும் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் ஒருவாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தார்.

அதுபோலவே தற்போதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கொடைக்கானலுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்