2 நாள் பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
2 நாள் பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி,
பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் நேற்று முன்தினம் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோருடன் பங்கேற்றார்.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்க உள்ள வெற்றி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின், அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த பொருளாதார நாடான இந்தியாவில் தொழில் தொடங்கினால் வளரலாம், வாருங்கள் என்று பிரிக்ஸ் நாடுகளின் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், 2 நாள் பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன, ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேசினார். டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.