இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலன்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணத்துக்கு மறுத்ததால் ராஜபாளையத்தை சேர்ந்த பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2024-04-29 03:23 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்து கொத்தனார் தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகள் பாண்டிச்செல்வி (வயது 28). இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த குணசேகர் (32) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் செல்போன் மூலம் பேசி வந்தனர். அவ்வப்போது நேரிலும் சந்தித்து உள்ளனர். இதற்கிடையே இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குணசேகருடன் பேசுவதை பாண்டிச்செல்வி தவிர்த்து வந்துள்ளார்.

ஆனாலும் அவரை குணசேகரன் சந்தித்து, திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து குணசேகரன் மீது ராஜபாளையம் தெற்கு போலீசில் பாண்டிச்செல்வி புகார் அளித்தார்.

இந்தநிலையில் நேற்று தனது வீட்டு மாடியில் பாண்டிச்செல்வி, அவருடைய அக்கா பாண்டீஸ்வரி மற்றும் சிலர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு குணசேகரன் வந்தார். அவர், பாண்டிச்செல்வியிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பாண்டிச்செல்வி அவரது விருப்பத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன், தன்னுடைய பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து, பாண்டிச்செல்வி மீது ஊற்றினார். அவர் மீது தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பாண்டிச்செல்வியின் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு பாண்டீஸ்வரி மற்றும் சிலர் அலறி துடித்தனர். இந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, பாண்டிச்செல்வியை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் பாண்டீஸ்வரிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள சில பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பி ஓடிய குணசேகரனை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்