உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் : சிவசேனா
உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.
மும்பை,
மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த சூழலில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மராட்டிய அரசியலில் சிவசேனா மற்றும் பாஜக இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே இடையே சகோதர ரீதியிலான உறவுகள் இருக்கிறது.
எனவே, மராட்டியத்தில் உள்ள இளைய சகோதரர் உத்தவ் தாக்கரே அரசுக்கும், மாநில வளர்ச்சிக்கும் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. பிரதமர் மோடி எந்த கட்சிக்கும் சார்ந்தவர் அல்ல, இந்த தேசத்துக்கே பொதுவானவர். ஆதலால், மராட்டிய மக்கள் எடுத்துள்ள முடிவுக்கு மத்தியில் ஆளும் அரசு மதிப்பளித்து, எந்தவிதமான தொந்தரவும், இடையூறும் வழங்காமல் நிலையான அரசு செயல்பட ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.