கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை : நானாவதி -மேத்தா கமிஷன் அறிக்கை

கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று நானாவதி - மேத்தா கமிஷன் அறிக்கை அளித்துள்ளது.

Update: 2019-12-11 06:49 GMT
அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்.6-வது பெட்டி சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டது.   இதில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். ரயில் பெட்டி எரிந்ததில் 25 பெண்கள், 15 குழந்தைகள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. 

இந்த கலவரத்தில் 1263 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 298 தர்காக்கள், 290 மசூதிகள், 17 கோயில்கள், 3 கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டன.    கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் கலவரம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் நானாவதி, அக்ஷய் மேத்தா ஆகியோரை கொண்ட நானாவதி கமிஷனை குஜராத் அரசு 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் அமைத்தது. இந்த கமிஷன் ஏறத்தாழ 17 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு  இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

குஜராத்  சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,  கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோத்ரா கலவரத்துக்கும் அப்போது ஆட்சியில் இருந்த மோடி அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும் நற்சான்று அளித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்