குடியுரிமை மசோதா குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை -அமித்ஷா
குடியுரிமை மசோதா குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். மனுவை தாக்கல் செய்து அமித்ஷா பேசியதாவது:-
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினரின் மக்கள் தொகை 20 சதவிகிதம் குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும். துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மை மக்களுக்கு இந்த மசோதா உரிய உரிமைகளை அளிக்கும். தேர்தல் சமயத்தில் இந்த மசோதா குறித்து நாங்கள் வாக்குறுதி அளித்தோம். இதற்காகவே எங்களை மக்கள் வெற்றி பெற செய்தனர்.
குடியுரிமை திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்படுகிறது. இந்திய முஸ்லிம்களுக்கும் மசோதாவுக்கும் என்ன தொடர்பு? சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். தேசிய குடியுரிமை மசோதா குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தான் செயல்படுகிறது. இந்த அரசின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.