முழு அடைப்புக்கு மத்தியில் பீகாரில் இரு பிரிவினரிடையே துப்பாக்கி சூடு - 13 பேர் காயம்

முழு அடைப்புக்கு மத்தியில் பீகாரில் இரு பிரிவினரிடையே நடந்த துப்பாக்கி சூட்டில், 13 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-12-21 19:59 GMT
பாட்னா,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பீகாரில் நேற்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தலைநகர் பாட்னாவுக்கு அருகே உள்ள புல்வாரிசரிப் பகுதியில் 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. முழு அடைப்பு தொடர்பாக நடந்த இந்த மோதலில் இரு பிரிவினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர்.

இதில் சுமார் 13 பேர் குண்டு காயமடைந்தனர். அவர்கள் பாட்னா மற்றும் நாளந்தா மருத்துவக்கல்லூரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பாட்னாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்