கேரளாவைச்சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : கேரள அரசு அவசர ஆலோசனை
கேரளாவைச்சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
திருவனந்தபுரம்,
சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேரள மாநில அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை மந்திரி சைலஜா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.